கந்தபுராணத்தின் உபதேசக் காண்டத்தில் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை சோமவார விரதம், உமா மகேஸ்வர விரதம், திருவாதிரை, மகாசிவராத்திரி, கல்யாண விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவை. சோமவார விரதத்தை திங்கள்கிழமைகளில் அனுஷ்டிப்பர். கார்த்திகை மாதம் இதை துவங்குவது சிறப்பு.
கார்த்திகை மாத பவுர்ணமியில் (திருக்கார்த்திகை) மேற்கொள்ளும் விரதம் உமா மகேஸ்வர விரதம். ஆருத்ரா அபிஷேகம் நடக்கும் மார்கழி திருவாதிரை நன்னாளில் சிவனுக்காக மேற்கொள்வது திருவாதிரை விரதம். மாசியில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் இரவு கண்விழித்து மேற்கொள்ளும் விரதம் மகாசிவராத்திரி. சிவன் பார்வதியை திருமணம் புரிந்த பங்குனி உத்திரநாளில் வருவது கல்யாண விரதம். அம்பிகையும், ஈசனும் சேர்ந்து திருநடனம் புரிந்த தைப்பூச நன்னாளில் மேற்கொள்வது பாசுபத விரதம். வைகாசி வளர்பிறை அஷ்டமியன்று வருவது அஷ்டமி விரதம். தீபாவளியன்று சிவனைக் குறித்து மேற்கொள்வது கேதார விரதம். இந்த விரதங்களை பக்தியுடன் அனுஷ்டித்தால் முன்வினைப் பாவம் நீங்கும். சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.