சூரபத்மனை வென்ற மகிழ்ச்சியுடன் முருகன் அருளும் தலம் திருச்செந்துார். இரண்டாம் படைவீடான இதற்கு ‘வெற்றி மாநகர்’ என்னும் பொருளில் ‘ஜெயந்தி புரம்’ என்றும் பெயருண்டு. ‘ஜெயந்தி’ என்னும் சொல்லே ‘செந்தில்’ என திரிந்தது. முருகனின் வேலால் உருவான நாழிக்கிணறு தீர்த்தம் இங்குள்ளது. சூரனை வதம் செய்த பாவம் தீர, சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யும் வகையில் தாமரை மலர், ருத்ராட்சமாலை தாங்கியபடி முருகன் காட்சியளிக்கிறார். மாசி மகத்தன்று கடலில் நீராடி முருகனைத் தரிசிப்பது பல மடங்கு புண்ணியம் தரும்.