கிருணு என்னும் மகரிஷியின் கண்களில் வெளிப்பட்ட வீரியத்தை பாம்பு ஒன்று விழுங்கியது. அந்த பாம்பின் வயிற்றில் பிறந்த குழந்தைக்கு ரத்னாகரன் என பெயரிட்டு வேடர்கள் சிலர் வளர்த்தனர். வேடர் குலப் பெண்ணை மணந்த ரத்னாகரன், பிழைப்புக்காக வழிபோக்கர்களிடம் கொள்ளையடித்தார்.
ஒருமுறை சப்தரிஷிகள் அந்த காட்டிற்கு வந்தபோது அவர்களிடம் கைவரிசையை காட்ட முயன்றார். அவர்கள் அறிவுரை சொல்லி அவரை திருத்தியதோடு குடும்பத்தாரிடம் ஒரு கேள்வி கேட்குமாறு அனுப்பினர். ‘‘நான் செய்யும் திருட்டால் வரும் பணத்தை அனுபவிக்கும் நீங்கள் என் பாவத்தில் பங்கேற்பீர்களா?’’ என்பதே அக்கேள்வி. ஆனால் குடும்பத்தினர் யாரும் ஏற்க விரும்பவில்லை. அதன்பின் குடும்பத்தை விட்டு விட்டு, நல்வழிகாட்டும்படி ரிஷிகளிடம் வேண்டினார். அவர்கள் ‘மரா’ என்னும் மந்திரத்தை உபதேசித்தனர். அதை வேகமாக உச்சரிக்க ‘ராம ராம’ என ஒலித்தது. உணவு, உறக்கத்தை தொலைத்து விட்டு ஜபித்ததால் புற்றால் மூடப்பட்டார். அவரே ‘வால்மீகி முனிவர்’ என பெயர் பெற்றார்.