பதிவு செய்த நாள்
15
மார்
2026
03:03
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 58வது ஜெயந்தி மகோத்சவத்தையொட்டி மூன்று நாட்களாக சங்கரமடத்தில், தினமும் வேதபாராயணம், வித்வத்சதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீத கச்சேரி உள்ளிட்டவை நடந்து வந்தது.
ஜெயந்தி மகோத்சவமான நேற்று காலை, சிறப்பு ஹோமம் நடந்தது. இதில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றனர்
தொடர்ந்து, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது. இதில், பல்வேறு குடங்களில் நிரப்பப்பட்டிருந்த புனிதநீரால், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, இளைய மடாதிபதி சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், கலசாபிஷேகம் செய்தார்.
தொடர்ந்து, காஞ்சி சங்கரமடம் நகர வரவேற்பு கமிட்டியினர் மற்றும் தமிழகம் முழுதும் இருந்து பல்வேறு கோவில்களில் சிறப்பு அர்ச்சனை செய்து எடுத்து வரப்பட்ட சுவாமி பிரசாதத்தை கோவில் அர்ச்சகர்கள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கினர்.
மாலையில் புஷ்பாஞ்சலி நடந்தது. இதில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலி செய்தார். தொடர்ந்து சுவாமிகள் இருவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
ஜெயந்தி மகோத்சவத்தையொட்டி, சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோத்சவத்தையொட்டி, சங்கரமடம் சார்பில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் அருகில், ஏனாத்துார் மற்றும் காரை கிராமங்களில் நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கணபதி, சுரேஷ் விவேகானந்தன் உள்ளிட்ட குழுவினர் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கினர். காஞ்சி காமாட்சி சங்கரமடம் வரவேற்பு குழு சார்பில், சங்கரடம் நுழைவாயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோத்சவத்தையொட்டி, திருத்தணி தொண்டை மண்டல வேளாளர் சங்கம் சார்பில், 301 பால்குட ஊர்வலம் நடந்தது. சங்கரமடத்தில் மாநில தலைவர் எல்லப்பன் பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பல்வேறு முக்கிய வீதி வழியாக காமாட்சியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் சென்றது. அங்கு காமாட்சியம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்யப்பட்டது.