குறிப்பிட்ட கிராமத்தில் அபூர்வ பழங்கள் கிடைப்பதாகவும், அதைச் சாப்பிட்டால் நீண்ட நாள் பசியின்றி வாழலாம் என்றும் சூபிஞானி ஒருவருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அங்கு சென்ற அவருக்கு பழம் கிடைக்கவில்லை. அவரைக் கண்ட இளைஞன் ஒருவன், ‘‘நீங்கள் எதையோ தேடுவது போல தெரிகிறது. நான் உதவட்டுமா?” எனக் கேட்டான். அவனிடம் “இங்கு அபூர்வமான பழம் கிடைப்பதாக கேள்விப்பட்டேன். அதைப் பயிர் செய்து ஏழைகளுக்கு வழங்க விரும்புகிறேன்’’ என்றார். “ஐயா... இங்கே காத்திருங்கள். சிறிது நேரத்தில் வருகிறேன்” எனச் சொல்லிவிட்டு புறப்பட்டான். தன் வீட்டில் இருந்து பழத்துடன் திரும்பினான். ‘‘நீங்கள் கேட்ட பழம் இதுதான்” என்று கொடுத்தான். “இந்த கிராமத்தில் இந்தப் பழம் எளிதாக கிடைக்கும் என்றார்களே” எனக் கேட்டார் ஞானி. “உண்மை தான். இந்த பழம் நிறைய கிடைத்து வந்தது. ஆனால் சுயநலத்தால் ஊரார் பழத்தை பதுக்க ஆரம்பித்து விட்டனர். இதைப் பயிரிடுவதைக் கூட ரசியமாகச் செய்கின்றனர். ஆனால் இதைப் பயிரிட்டு பட்டினியால் வாடுவோருக்கு பயன்படுத்த போவதாக தெரிவித்த தங்களுக்கு உதவ வேண்டும் எனத் தோன்றியது” என்றான் இளைஞன். அதைக் கண்டு நெகிழ்ந்த ஞானி, “உன் போல நல்லமனம் கொண்டவர்கள் வாழ்ந்தால் உலகில் குறையே இருக்காது’’ என வாழ்த்தினார்.