மார்க்கண்டேயரின் ஆயுள் விதிப்படி பதினாறு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரது மரண நாள் வந்ததும் எமன் அவரது உயிரை பறிக்க வந்தான். மார்க்கண்டேயர் உடம்பெங்கும் திருநீறு பூசியபடி, திருக்கடையூர் சிவலிங்கத்தை கைகளால் அணைத்துக் கொண்டார். ஆனாலும் எமன் விடவில்லை. சன்னதிக்குள் நுழைய முயன்றான். காலால் உதைத்து வெளியே தள்ளினார் சிவன். இதன்பின் எமதுாதர்களிடம், “திருநீறு பூசியவர்களை கண்டால் வணங்கிச் செல்லுங்கள்,” என உத்தரவிட்டான் எமன். திருநீறுக்கு காப்பு, ரட்சை என்றும் பெயருண்டு. இதற்கு ‘பாதுகாப்பது’ என்று பொருள். திருநீற்றை பூசும் போது கீழே சிந்தாமல் ‘சிவாயநம’ என்று சொல்லி பூச வேண்டும். இதனால் மனத்துாய்மையும், புண்ணியமும் உண்டாகும்.