பதிவு செய்த நாள்
04
ஆக
2020
11:08
சென்னை; அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு, பஞ்சவடியில் உள்ள ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், நாளை சிறப்பு திருமஞ்சனம் நடக்க உள்ளது.
திண்டிவனம்- - புதுச்சேரி சாலையில், பஞ்சவடி தலத்தில் அமைந்துள்ளது, ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வகித்து வருகிறது.இந்த தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, சொர்ண ஸ்ரீராம பாதுகையானது மிகவும் சிறப்பு பெற்றது.
பல திவ்ய தலங்களில், மங்களா சாசனமும், அயோத்தியில் உள்ள சரயு நதியில், திருமஞ்சனம் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. உலக நன்மைக்காக, சொர்ண ஸ்ரீராம பாதுகைக்கு, தினசரி சகஸ்ரநாம அர்ச்சனையும் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, நாளை நடக்க உள்ளது. அப்பணிகள் சிறப்பாக துவங்கி, மகா சம்ரோக்ஷணம் நடக்க வேண்டி, பஞ்சவடியில் நாளை காலை, 8:00 மணிக்கு பால், மஞ்சள், சந்தனம், கான்பூர் பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால், விசேஷ திருமஞ்சனம் நடக்க உள்ளது.திருமஞ்சனம் கோவில் ஸ்தல பட்டர் ரங்கராஜ், வாசுதேவ பட்டாச்சாரியர்கள் தலைமையில் நடக்க உள்ளது. திருமஞ்சனத்தில், பக்தர்கள் பங்கேற்க முடியாததால், அவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து, பிரார்த்தனை செய்து கொள்ளலாம் என, டிரஸ்ட் தலைவரும், அறங்காவலருமான கோதண்டராமன் தெரிவித்தார்.