பாண்டவர்களின் சார்பாக கவுரவர்களிடம் துாது புறப்பட்டார் கிருஷ்ணர். கவுரவர்களின் அரண்மனைக்குச் செல்லாமல், அவர்களது சித்தப்பாவான விதுரரின் மாளிகைக்குச் சென்று விருந்து உண்டார். முதலில் தங்களைத் தேடி வராத கிருஷ்ணரை அவமதிக்க முடிவெடுத்தான் துரியோதனன். அவையில் இருந்தவர்களிடம், ‘‘யாரும் கிருஷ்ணர் வரும் போது எழுந்திருக்கக் கூடாது. அவரை அவமதிக்க வேண்டும்,’’ என்று கட்டளையிட்டான். ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தேஜஸில் மயங்கி அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து விட்டனர். துரியோதனன் மட்டும் ஏளனத்துடன், ‘‘கிருஷ்ணா! நீர் துாது வந்ததன் நோக்கம் என்ன?’’ என்று கேட்டான். வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர். ஆனால், துரியோதனனோ ஒரு பிடி மண் கூட கிடையாது என்று மறுத்து விட்டான். நல்லவரான விதுரர் மட்டும் துரியோதனனிடம் தர்மத்தை எடுத்துச் சொன்னார். ஆனால், விதுரரின் பிறப்பைப் பற்றி பேசி, துரியோதனன் அவமதித்தான். ‘‘தர்மத்தின் பக்கம் தான் நிற்பேன்! என்னுடைய வில்லைக் கொண்டு அதர்மத்திற்கு உதவ எனக்கு மனமில்லை!’’ என்று சொல்லி, அவர் தன் வில்லை முறித்து விட்டார். நல்லவரான விதுரர், செஞ்சோற்றுக்கடனுக்காக துரியோதனுக்கு உதவினால், பாண்டவர்களால் போரில் வெல்ல முடியாது என்பதால், துரியோதனனுக்கும், விதுரருக்கும் வாதத்தை உருவாக்கி, அவரது கையாலேயே முக்கியமான ஒரு வில்லையும் ஒடிக்கச் செய்து தந்திரம் செய்தார் கிருஷ்ணர்.