பதிவு செய்த நாள்
29
செப்
2020
03:09
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் நூறாண்டு பழமை மிக்க பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளகோவில்,மூலனூர் ரோட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தெய்வநாயகி உடனமர் சோளீஸ்வரர் திருக்கோவில் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. சோளீஸ்வரர் திருக்கோவில் புதிதாகக் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்து 5 ஆண்டுகளாகிறது. வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
மழை பெய்தால் வெள்ளகோவில் நகரிலிருந்து மழைநீர் கோவில் முன்பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாயில் செல்லும்போது, நிறம்பி சாக்கடையடன், மழைநீர் கலந்து 4 அடி பள்ளத்தில் வரதராஜபெருமாள் கோவிலுக்குள் புகுந்து தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. மழை, சாக்கடை நீர் வடிந்த பின்பு சுத்தப்படுத்திய பிறகே பூஜைகள் நடக்கிறது. மழைநீர் தேங்குவதால் மகாலட்சுமி கோயில் முன்புறம் உள்ள காம்பவுண்ட் சுவர் 50 அடி நீளம் உடைந்து விழுந்து விட்டது.
நூறாண்டு பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவிலினுள் தும்பிக்கையாழ்வார், வரதராஜபெருமாள், மஹாலக்ஷ்மி, ஆஞ்சிநேயர், கருடாழ்வார் என காலை,உச்சி, மாலை என மூன்று கால பூஜை நடந்து வருகிறது. வெள்ளி, சனி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாத சனிக்கிழமை விசேஷ பூஜை நடக்கிறது. அறிவுத்துறை உபயதாரர்கள் மூலம் கோவிலை புதுப்பித்துக் கொள்ளலாம் என உத்தரவு வழங்கியும், கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய இதுவரை யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.