பதிவு செய்த நாள்
30
நவ
2020
09:11
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை கிருத்திகை விழா மற்றும் மஹா தீபத் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
மூன்று நாட்களாக பெய்த மழை, நேற்று, சற்று ஓய்வு கொடுத்ததால், அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர் விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், கோவிலில் உட்புறப்பாடு நடந்தது.
அப்போது மயில் வாகன மண்டபத்தில் வைக்கப்பட்ட சொக்கப்பனையில், நெய் தீபம் ஏற்றப்பட்டது.அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள, பச்சரிசி மலையில், பெரிய அகல் விளக்கில், 300 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீ., நீளமுள்ள திரியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக தீபத் திருவிழாவில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை, 6:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த தீபத்தை பார்த்த பின், திருத்தணி நகரம் முழுதும் வீடுகள் மற்றும் கடைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். நிவர் புயல் காரணமாக, மூன்று நாட்களாக, திருத்தணியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மலைக்கோவிலில் பக்தர்கள் மிக குறைவாகவே இருந்தனர்.நேற்று காலை முதல், மாலை வரை, திருத்தணியில் தொடர் மழை இல்லாததால், காவடிகளுடன் மலைக்கோவிலில் குவிந்ததால் பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.