பதிவு செய்த நாள்
06
ஜன
2021
06:01
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அதிகாரிகள், பணியாளர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்தும் வகையில், எலக்ட்ரானிக் வருகைப் பதிவேடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்து, 650 கோவில்கள், திருமடங்கள், அறக்கட்டளைகள் உள்ளன. இவற்றை நிர்வகிக்க, 2,409 பணியிடங்கள் உள்ளன.அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்கள் வருகை பதிவேடு, இன்றளவில் மேம்படுத்தப்படவில்லை. கோவில்களில் பணியாளர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வந்து செல்வதில்லை; இதனால், நிர்வாக சீர்கேடு, முறைகேடுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பக்தர்கள் சிலர் கூறியதாவது:அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சில கோவில்கள் தவிர, பெரும்பாலான கோவில்களில் அதிகாரிகள், பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை. பல அதிகாரிகளை, விழாக்கள் நடக்கும் காலங்களில் மட்டும், கோவிலில் காண முடிகிறது; மற்ற நாட்களில் யாரும் இருப்பதில்லை.
இதனால், நிர்வாக சீர்கேடு ஏற்படுவதோடு, கோவில்களில் உள்ள ஆவணங்கள், சிலைகள், விலை உயர்ந்த நகைகளும் திருடு போவதற்கு காரணமாக உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், எலக்ட்ரானிக் வருகைப் பதிவேடு கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை உடனடியாக அமல்படுத்தி, அதிகாரிகள், பணியாளர்களை முழுமையாக பணி செய்ய வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர்-