பதிவு செய்த நாள்
24
ஏப்
2021
06:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த, ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோயில்களில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், கொரோனா தொற்றால், அரசு வழிகாட்டுதலின்படி சித்திரைத் திருவிழா ஏப்., 15 ல் துவங்கியது. இங்கு பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றப் படாமல், தினமும் காலையில் குறைவான பக்தர்கள் வருகையுடன், சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதன்படி நேற்று விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலித்தார். இன்று காலை விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
*இதேபோல் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்கியது. தொடர்ந்து மாலை பெருமாள் யாகசாலை முன்பு சிறப்பு தீபாராதனை நடந்தது. மேலும் அரசு வழிகாட்டுதலின்படி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உட்பட, அனைத்து நிகழ்வுகளும் கோயில் வளாகத்தில் நடக்க உள்ளது. தொடர்ந்து குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே, சமூக இடைவெளியுடன் பங்கேற்று வருகின்றனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.