பதிவு செய்த நாள்
25
ஏப்
2021
07:04
மாதந்தோறும் பவுர்ணமி தினம் வந்தாலும், சித்திரையில் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்தது. இதை சித்ரா பவுர்ணமி" என்று அழைப்பதும் உண்டு. வரும் 26-ம் தேதி சித்ரா பவுர்ணமி வருகிறது. சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரை பவுர்ணமி தினத்தில் பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும் என்பது இந்த நாளின் மகிமை.
சித்திரை பவுர்ணமி நாளில் அம்பாளின் சிலை அல்லது படத்திற்கு மலர் மாலை அணிவித்து, வஸ்திரம், ஆபரணங்களை அணிவித்து வழிபடலாம். அம்பாளுக்கு மஞ்சள் கலந்த சாதம் படைத்து, பானகம், கிராம்பு, ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்த தாம்பூலம் அடங்கிய நைவேத்தியத்தைப் படைக்க வேண்டும். அன்று அம்பாள் வழிபாடு செய்தால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நிலாச்சோறு : சந்திரன் சக்திமிக்க ஒளியை சித்ரா பவுர்ணமி நாளில் தான் கொடுக்கிறது. அறிவியல் ரீதியாக மனிதர்களின் ஆரோக்கியம் கூடுகிறது. சந்திரன் மனதுகாரகன். ஆதலால் மனபலம் கூடும். அன்றைய நிலவொளியில் குடும்பம், உறவுகள் இணைந்து சாப்பிட்டு மகிழ்வதால் மனமகிழ்வும் ஆரோக்கியமும் ஆத்மபலமும் கூடுகிறது. புதுமணத்தம்பதிகள் தங்களது புது உறவு முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், சித்ரா பவுர்ணமி நாளில் உறவுகளோடு சேர்ந்து நிலாச்சோறு சாப்பிடும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
அவரவர் வீடுகளில் செய்த ஷசித்ரா அன்னம்| எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும் அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.
இந்திரன் பாபவிமோசனம் : இந்திரன் பாபவிமோசனம் வேண்டி அனைத்து சிவதலங்களையும் சென்று வணங்கி வந்த நிலையில், மதுரை சொக்கநாதரைத் தரிசித்து பாப விமோசனம் பெற்ற புண்ணிய நாள் இது. மதுரை வைகைக்கரையில் கள்ளழகர் எழுந்தருளம் நாளும் சித்ரா பவுர்ணமியே.
சித்ரகுப்தன் பிறந்தநாள் : நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை எழுதிவைத்து. நம்முடைய உயிர் பிரிந்ததும், நாம் நரகத்துக்குச் செல்வோமா ? சொர்கத்துக்குச் செல்வோமா ? என்பதை நிர்ணயிப்பது சித்ரகுப்தனின் கையில் இருக்கும் கணக்குப் புத்தகம் தான்.
அப்படிப்பட்ட சித்ரகுப்தன் பிறந்தநாள் தான் சித்ரா பவுர்ணமி" என்கின்றன புராணங்கள். இந்த தினத்தில் சித்ரகுப்தனை வழிபட்டு தான தர்மங்கள் செய்வதால், அவரின் அருளையும், நீண்ட ஆயுளையும் பெறலாம்.
சித்ரகுப்தன் பூஜை : வீட்டை சுத்தம் செய்து, பூஜை அiறியல் விநாயகர் படத்தை வைத்து, அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். ஷசித்ரகுப்தா| என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். விரத நாளில் உப்பில்லாத உணவுகளையயே உண்ண வேண்டும். மாலையில் பவுர்ணமி உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பும், எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம். சித்ர குப்த விரத முறையில் உப்பு, பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை மக்கள் தவிர்க்கின்றனர். காமதேனுவிடமிருந்து சித்ரகுப்தன் தோன்றியதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன. படையலுடன் எல்லாக் காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபராதனைக் காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. இதன்மூலம் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கேதுவிடம் இருந்து விடுபட : நவக்கிரங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். ஞானக்காரகனான கேது, பூர்வ புண்ணியத்தை நிர்ணயித்து கொடுப்பவர். ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும். அதனால் தான் ஜோதிட சாஸ்திரம், ஷராகுவைப் போல் கொடுப்பார் இல்லை, கேதுவைப் போல் கெடுப்பார்| இல்லை என்கிறது. இப்படிப்பட்ட கேது பகவானின் தொல்லையில் இருந்து விடுபட ஆண்டுக்கு ஒருமுறையாவது சித்ரகுப்தனை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
ஒருவலத்தில் ஓராண்டு பலன் : சித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றது. இங்கு மலையே சிவனாக வணங்கப்படுவதால் மலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தூர கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீ அருணாசலேஸ்வரர், ஸ்ரீ உண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். சித்திரை பவுர்ணமியில் கிரிவலம் செல்வது மிகவும் சிறந்தது என்பது சித்தர்கள் வாக்கு. அன்றைய தினம் கிரிவலம் வந்தால் ஓராண்டு முழுவதும் கிரிவலம் வந்ததற்கான பலன் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.