பதிவு செய்த நாள்
09
மே
2021
02:05
திருப்பதி : அனுமன் பிறப்பிடம் சேஷாத்திரி மலைதொடரில் உள்ள அஞ்சனாத்திரி என்ற தேவஸ்தான விவாதத்தை எதிர்த்து, ஆறு பக்க கடிதம் எழுதி, கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலைக்கு அனுப்பி உள்ளது. ராம பக்தனான அனுமன் பிறப்பிடம் குறித்து பல புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும், வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட பல புராணங்களில், அனுமன் பிறப்பிடம் திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்திரி என கூறப்பட்டுள்ளது.இதை அடிப்படையாக வைத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம், இதுகுறித்து ஆய்வு செய்ய, பண்டிதர்கள் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அக்குழுவினர் இதுகுறித்த ஆதாரங்களை சேகரிக்க பல புராணங்கள், இதி காசங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில், அனுமன் பிறப்பிடம் சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்திரி என, முடிவு செய்யப்பட்டது. இதை ஸ்ரீராமநவமி அன்று, தேவஸ்தானம் திருமலையில் அதிகாரப்பூர்வமாக ஆதாரங்களுடன் வெளியிட்டது.இதை எதிர்த்து, கர்நாடகாவில் உள்ள கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஆறு பக்க கடிதம் அனுப்பி உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரலாற்று ஆய்வாளர்கள் நடத்திய ஆராச்சிகளின் முடிவில், ஹம்பியில் உள்ள கிஷ்கிந்தையில் அனுமன் பிறந்தார் என உறுதியாகி உள்ளது. இந்நிலையில், திருமலை தேவஸ்தானம் எந்த வரலாற்று ஆய்வாளர்களை வைத்து ஆராய்ந்து இதுபோன்ற ஒரு முடிவிற்கு வந்து, திடீரென அஞ்சனாத்திரி மலை தொடரில் அனுமன் பிறந்தார் என்று அறிக்கை சமர்பித்துள்ளது? இதற்கு ஆய்வாளர்களின் கூற்றுப்படி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு பதில் அளிக்க, திருமலை தேவஸ்தானம் தயாராகி வருகிறது.