பதிவு செய்த நாள்
06
ஜூலை
2021
03:07
திண்டுக்கல் : ஊரடங்கு தளர்வையடுத்து 55 நாட்களுக்கு பின் திண்டுக்கல், பழநி உட்பட மாவட்ட கோயில்களில் பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவலை தடுக்க மே 10 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் அபிராமியம்மன், கோட்டை மாரியம்மன், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், என்.ஜி.ஓ., காலனி முருகன், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.பழநி மலைக்கோயில் காலை 6:00 மணிக்கே சென்று தரிசனம் செய்தனர். மாலையில் கார்த்திகை துவங்கியதால் அதிகளவில் வந்தனர். திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன்கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தர்கள் வந்தனர். கோயில் வாசலில் பக்தர்கள் கை கழுவ தண்ணீர், சானிடைசர் வைக்கப்பட்டிருந்தது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் முகக்கவசம் அணிந்த பக்தர்களை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்தனர். கொரோனா விதிகளை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.