பதிவு செய்த நாள்
23
அக்
2021
10:10
சென்னை:வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு, வருவாய் குறைந்த கோவில்களை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரம், காசி விஸ்வநாதர், வேணுகோபால சுவாமி கோவில்களில், அமைச்சர் சேகர்பாபுநேற்று ஆய்வு மேற்கொண்டார். பின், அவர் அளித்த பேட்டி:உதயகிரி சாமைய்ய ஜமீன்தார் என்பவரின் மகன் வெங்கைய்யா என்பவர், இந்த கோவிலுக்கு பூஜைகள், பராமரிப்பு பணிகளுக்காக, இரண்டு ஜமீன் கிராம நிலங்களை உயில் சாசனமாக, 177 ஏக்கர் இடத்தை, 1984ல் வழங்கியுள்ளார்.
அதில், ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை மீட்டெடுக்க, அறநிலையத் துறை, வருவாய் துறையுடன் இணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கோவில்களில் சாமி தரிசனம் செய்தால் மனம் இலகுவாகும். ஆனால், கோவில் சிதிலமடைந்து உள்ளதை கண்டு மனம் கனக்கிறது.எனவே, விரைவில் திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்தப்படும். அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இக்கோவிலில் பிரசித்தி பெற்ற ருத்ராட்ச பந்தல் உடைந்துள்ளதால், அங்கு மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்படுவதில்லை. அது, விரைவில் சரி செய்யப்படும்.வருவாய் குறைவாக உள்ள கோவில்கள், வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த கோவிலுக்கு சொந்தமான, 177 ஏக்கர் இடத்தின் பெயரில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். சென்னை, குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்கள் தரப்பில் இருந்தும் விளக்கம் தந்துள்ளனர். நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளோம். அந்த நிலத்தை, அரசு மீட்கும் பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், காஞ்சிபுரம் மண்டல இணை கமிஷனர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.