வடலுார்: வடலுார் அருகே , வள்ளலார் சித்தி வளாகத்தில் நேற்று திரு அறை தரிசன விழா நடந்தது. கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனவிழா 18ம் தேதி நடந்தது. மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திரு அறை தரிசன விழா நேற்று நடந்தது. வடலுார் சத்திய ஞான சபையில், வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் வைத்திருந்த பெட்டி, அவர் நடந்து வந்த பாதை வழியே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பார்வதிபுரம், கருங்குழி, மேட்டுக்குப்பம் மக்கள் வழிநெடுகிலும் வரவேற்றனர். பின், வள்ளலார் சித்தி பெற்ற வளாகத்திருமாளிகையின் அறை முன் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. பகல் 12:00 மணிக்கு திரு அறை தரிசனம் துவங்கி மாலை 6:00 மணி வரை நடந்தது. அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.