பதிவு செய்த நாள்
25
ஜன
2022
10:01
சென்னை : பக்தர்களுக்கு தரமான பிரசாதம், அன்னதானம் வழங்கும் வகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவன தரச்சான்றிதழ்கள் பெற்ற கோவில் செயல் அலுவலர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில்; சமயபுரம் மாரியம்மன் கோவில்; திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்துடன், 754 கோவில்களில் ஆண்டுக்கு 76 கோடி ரூபாய் செலவில், தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், மத வழிபாட்டு தலங்களில், இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாத வகைகளை பரிசோதித்து, தரச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆறு கோவில்களுக்கு தரச் சான்றிதழ்கள் பெறப்பட்டன. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் 308 கோவில்களுக்கு தரச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும், 440 கோவில்களுக்கு சான்றிதழ்கள் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் 394 மத வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசால் 314 கோவில்களுக்கு தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதன் வழியே, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம், சுத்தமாகவும், சுகாதார முறையிலும் தயாரித்து வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. தரச்சான்றிதழ் பெற்றதை பாராட்டும் வகையில், 10 கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர்களை பாராட்டி, தரச்சான்றிதழ் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.