பதிவு செய்த நாள்
25
ஜன
2022
04:01
பல்லடம்: பழனியில், தைப்பூச விழா நிறைவடைந்த பின்னும், பக்தர்கள் பலர் தொடர்ந்து பாத யாத்திரை சென்று வருகின்றனர்.
ஆண்டுதோறும் பழனியில் நடைபெறும் தைப்பூச விழாவுக்கு, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர், பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக, தமிழக அரசு கோவில்களை திறக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, முக்கிய விசேஷ தினங்கள், மற்றும் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு, ஜன., 18 அன்று நடந்த தைப்பூச விழாவுக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பல லட்சக்கணக்கான பக்தர்கள், பழனியில் குவிந்தனர். இச்சூழலில், தைப்பூசம் முடிந்த பின்னும் தொடர்ந்து பக்தர்கள் பலர் பாதை யாத்திரை சென்று வருகின்றனர். பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக, தினசரி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை சென்று வருகின்றனர். அரசு விதித்த கட்டுப்பாடுகளும், ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடியதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.