பதிவு செய்த நாள்
20
ஜூலை
2012
10:07
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் வரதராஜப் பெருமாள் கோயிலில் 55 அடி உயரத்தில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுர திருப்பணியில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. முன் மண்டபம் அமைக்கும் பணி துவங்காததால் கும்பாபிஷேகம் நடத்த தாமதம் ஏற்பட்டுள்ளது. நெல்லை ஜங்ஷன் வீரராகவபுரத்தில் பழமைவாய்ந்த வரதராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி மகாத்மியத்தின் 16, 17வது அத்யாயத்தில் கோயிலைப் பற்றிய சிறப்புகள் கூறப்பட்டுள்ளது. இங்கு மூலவர் வீரராகவப் பெருமாளாக அருள்பாலிக்கிறார். வைகானச முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வரும் கோயிலில் கடந்த 1996ம் ஆண்டு பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
55 அடி உயர ராஜகோபுரம்: இக்கோயிலுக்கு 5 நிலைகளுடன் 55 அடி உயரத்தில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி துவங்கியது. இந்த பணிகளை வரதராஜபெருமாள் கைங்கர்ய டிரஸ்ட் மேற்கொண்டுள்ளது.22 அடி உயரத்தில் கல்காரமும், 33 அடி உயரத்தில் ராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள்ளன.
158 சுதை சிற்பங்கள்: ராஜகோபுரத்தில் வைகானச ஆகம விதிப்படி பெருமாள் ஆவர்த்தனங்கள், யாகசாலை திக்குகள், கோபுரத்தின் 4, 5வது நிலைகளில் பெருமாளின் அவதாரங்கள் சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கோவர்த்தன கிரி மலையை தூக்கி கொண்டிருப்பது போன்ற அவதாரம், ராமர் பட்டாபிஷேகம், சீதா கல்யாணம், காளிங்க நர்த்தனர், கிருஷ்ணனை பார்க்க குசேலர் அவலுடன் சென்ற காட்சி, கோபிகா வஸ்திரம், கிருஷ்ணர் பிறந்த காட்சிகள், ராமர் பாலம் அமைத்தல் போன்ற காட்சிகள் உட்பட 158 சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன் மண்டபம் பணிகள் தாமதம்: கோயிலில் முன்மண்டபம் 16 அடி உயரத்தில் உள்ளது. இந்த மண்டபம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டு 6 அடி உயரம் அதிகரிக்கப்பட்டு 22 அடி உயரத்தில் 4 தூண்களுடன் ஒரே மண்டபமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோயில் வளாகத்தில் இருந்த பழைய மண்டபங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மண்டபம் சாஸ்திர முறைப்படி சிம்மம், மதலை, போதிகை பீடம், நாணுதல் படங்கு உத்திரம் அம்சத்தில் 60 அடி அகலத்திலும், 40 அடி நீளத்திலும் அமைக்கப்படவுள்ளது. கற்களால் ஆன முன் மண்டபம் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரங்களை உபயதாரர்களிடம் இருந்து பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பணிகள் துவங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கோயிலை சுற்றிலும் இருந்த 5 கடைகள் அகற்றப்பட்டு மாடவீதியும் ஏற்படுத்தப்படவுள்ளது.
உபயதாரர்களுக்கு அழைப்பு! நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கல் மண்டபம் அமைக்கும் பணிகளுக்காக உபயதாரர்களிடம் இருந்து நிதிகளை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கல் மண்டப பணிகளை விரைவில் நிறைவேற்றி கும்பாபிஷேகத்தை ஜனவரி மாதம் நடத்த திருப்பணிக்குழு முடிவு செய்துள்ளது. மண்டப திருப்பணிகளுக்கு உதவ முன்வருவோர் எஸ்.வி.பி.கே.டிரஸ்ட், 50, ஏ.பி.பெருமாள் மேலரதவீதி, மேலவீரராகவபுரம், நெல்லை ஜங்ஷன், இந்தியன் பாங்க் கணக்கு எண்:762206482 என்ற எண்ணிற்கு செக் அல்லது டிடி அல்லது மணிடிரான்ஸ்பர் செய்யலாம் என திருப்பணிக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.