புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2026 03:04
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் "கூத்தபிஷேகம் தாலப்பொலி என்ற பெயரில் திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு திருவிழாவிற்கு மார்ச் 20ம் தேதி கொடியேறியது. திருவிழா நாளான இன்று காலை 7:30 கலசாபிஷேகம், பந்தீரடிபூஜை, கொட்டி பாடல் சேவை ஆகிய நிகழ்வுகள் நடந்தது. 9:00 மணிக்கு பரக்காட்டு தங்கப்பன் மாரார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சவாத்தியம் முழங்க ஆடை அபரணங்கள் முத்து மணி குடைகள் சூடிய 11 யானைகளின் அணிவகுப்பில் "காழ்சசீவேலி நடந்தது. 12:30 மணிக்கு உச்ச பூஜை, அவியிடல் சடங்குகள் அம்மனுக்கு நடந்தது. தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பஞ்சவாத்தியம் முழங்க ஆடை அபரணங்கள் அணிந்த ஒன்பது யானைகள் அணிவகுப்பில் முத்துமணி குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதை கண்டு மகிழ்ந்தனர். நாளை காலை கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவடைகிறது.