காளஹஸ்தி முத்தியாலம்மன் கோயில் திருவிழா: போத்துராஜா கோலமிட்டு பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2026 10:04
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் வருடாந்திர திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று மூலவர் சன்னதி முன்பு போத்துராஜா கோலமிட்டு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர் .
வழக்கமாக மற்ற அனைத்து பகுதியிலும் மூலவர் சன்னதியில் உற்சவ மூர்த்தியை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் செய்வது உற்சவம் நடத்துவது மரபு. ஆனால், இதற்கு நேர்மாறாக முத்தியாலம்மன் கோயிலில் மூலவருக்கு முன்பாக அம்மன் பல்வேறு வடிவங்களில் கோலமிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த திருவிழா கிராமப்புற சாதிகளின் பல்வேறு பாரம்பரிய மரபுகளை பிரதிபலிக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு பாரம்பரியத்தின் வரலாறு பற்றி தெரியப்படுத்தும் வகையில் இந்த கோவிலில் திருவிழா நடைபெறும். மூன்று நாட்களிலும் பல்வேறு வடிவங்களில் கோலமிட்டு வழிபடுகின்றனர். இந்த நிலையில் நேற்று மூலவர் சன்னதி முன்பு போத்துராஜா கோலமிட்டு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனின் விஸ்வரூப தரிசனத்தை போது ராஜா வடிவில் தரிசனம் செய்தனர். பின்னர், கோவிலில் இருந்து கரிகை எடுத்து வரப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளில் பிரமாண்டமாக ஊர்வலம் நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் கும்பம் படைத்தல் பலி பிரசாதம் வழங்கப்பட்டு, சிறப்பு கற்பூர ஆரத்தி கள் காட்டப்பட்டது. ஏராளமான நகர பக்தர்கள் அம்மனின் விஸ்வரூப போது ராஜா தரிசனம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.