சின்னாளபட்டி: சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் தெப்ப உற்சவம் நடந்தது.
சின்னாளபட்டி ஜீவா நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, ஏப். 26ல் சாட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு தினமும் திரவிய அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மே 3ல் அம்மன் அலங்கார ஊஞ்சல் சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இன்று அம்மன் தெப்ப உற்சவம் நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, கோயில் வளாகத்தில் மலர்கள், பழ வகைகளால் அலங்காரிக்கப்பட்ட தெப்பக்குளம் உருவாக்கப்பட்டு இருந்தது. உற்சவருக்கு விசேஷ அபிஷேகத்துடன், மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளல் நடந்தது. விழாவில் அன்னதானம், ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.