ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்கரையில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
ராமேஸ்வரம் வேர்க்கோடு கடற்கரையில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலில் கடந்த சில நாட்களாக ரூ.20 லட்சம் செலவில் கோபுரங்கள், முன் மண்டபம் புனரமைத்து திருப்பணிகள் நடந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் கோயில் முன் கோவை காமாட்சிபுரி ஆதினம் தலைமையில் சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமம் செய்து முதல்கால யாகசாலை பூஜை நடத்தினர். நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜை முடிந்ததும் கலசத்தில் புனித நீரை எடுத்து சென்று கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். பின் முருகன் சுவாமிக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழரசன், சேகர், சண்முகநாதன், தென்னரசு, வழிவிட்டான், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.