200 ஆண்டு பழமை வாய்ந்த 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2022 09:07
தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே மலமஞ்சனுார் வீரபத்திர சுவாமி கோயிலில் 200 ஆண்டுகள் பழமையான 10 ஐம்பொன் சுவாமி சிலைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். குருமன் இன பழங்குடியினர் வழிபடும் இக்கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா எடுப்பது வழக்கம். விழாவில் வீரபத்திரர், சிவன், பார்வதி உள்ளிட்ட 200 ஆண்டு பழமை வாய்ந்த 10 ஐம்பொன் சுவாமி சிலைகளை வைத்து வழிபடுவர். விழா முடிந்ததும் சிலைகளை கோயில் அருகே பாறை குகையில் வைத்து மூடி பாதுகாப்பாக வைப்பர். இந்தாண்டு விழாவை நடத்த நேற்று முன்தினம் மாலை சுவாமி சிலையை எடுக்க குருமன் இன பழங்குடியினர் சென்றனர். அங்கு சுவாமி சிலைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்றனர். கோயில் நிர்வாகி ஆவுடையான் புகாரின்படி தானிப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.