பதிவு செய்த நாள்
24
ஆக
2022
04:08
பல்லடம்: பல்லடம் அருகே, 16ம் நூற்றாண்டு நடுகல்லுக்கு கிராம மக்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். பல்லடம் அடுத்த, இஞ்சிப்பட்டி கிராமம் அய்யன் கோவில் செல்லும் ரோட்டில், நடுகல் ஒன்று உள்ளது. 16ம் நூற்றாண்டுக்கு உட்பட்ட இந்த நடுகல்லை, தலைவலிக்கு தீர்வு கிடைக்க வேண்டி, பாட்டையப்பன் என்ற பெயரில், கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த நடுகல், ரோட்டோரத்தில் பராமரிப்பு இன்றி சார்ந்த நிலையில் கிடந்தது. இது குறித்து, கடந்த டிச., 12 அன்று வெளியான தினமலர் நாளிதழில் சிறப்பு செய்தி வெளியானது. இதையடுத்து, கிராம மக்கள் நடுகல்லை சீரமைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். ஆக., 21 அன்று விநாயகர் வழிபாடு கணபதி, நவகிரக ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. சின்ன அய்யன் கோவிலில் இருந்து முளைப்பாரி தீர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. மாலை, யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 6.30 மணிக்கு தீர்த்த கலசங்கள் எடுத்துவரப்பட்டு, சின்ன அய்யன் கோவில் அர்ச்சகர் கிருபாகர சிவாச்சாரியார் மூலம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.