பரமக்குடி: பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் 60 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்படவுள்ளது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆக. 31 ல் நடக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். தொடர்ந்து பரமக்குடியில் உள்ள பல்வேறு பகுதிகளில் 60 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. இதற்காக 2 அடி முதல் 6 அடி உயரம் வரை உள்ள நீர் நிலைகளுக்கு பாதிப்பை உண்டாக்காத வகையிலான விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் மாநில பேச்சாளர் கங்காதரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் ஆதித்தன் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் குமரன் வரவேற்றார். கூட்டத்தில் விநாயகர் கமிட்டி உறுப்பினர்கள், இந்து முன்னணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது வழக்கம் போல் பரமக்குடி முக்கிய வீதிகளில் வலம் வரும் விநாயகர் சிலைகள், சுந்தரராஜ பெருமாள் கோயில் படித்துறை வைகை ஆற்றில் கரைக்கப்படும் என தெரிவித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.