பதிவு செய்த நாள்
01
செப்
2022
06:09
நாகப்பட்டினம்: நாகையில், பிரசித்திப் பெற்ற நவநீதகிருஷ்ணசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
துறைமுகப்பட்டினமான நாகை நகரம் டச்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்தப் போது, அமைச்சராக பணியாற்றியவர் ஜகுலநாயக்கர். இவர் கிருஷ்ணாவதாரத்தின் பெருமையால் ஈர்க்கப்பட்டதால், கடந்த 1824 ம் ஆண்டு,திவ்யதேசங்களில் 19 வது திவ்யதேசமான, செளந்திரராஜப்பெருமாள் கோவிலின், தென்மேற்கு மூலையில், கருவறை விமானத்துடன் கூடிய கோவில் அமைத்து, லெஷ்மி நாராயண பெருமாளை பிரதிஷ்டை செய்து, அருகில கையில் வெண்ணையுடன் ஆடும் பிள்ளை நவநீத கிருஷ்ணனை வைத்து வழிப்பட்டு வந்தார். பிரசித்திப் பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சி, கடந்த 28 ம் தேதி, பகவத் அனுக்ஞை, விஷ்வக் சேன பூஜை, சோம வாஸ்து ஹோமம் திக்பந்தனத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை கோ பூஜை,5 ம் காலம், துவார,கும்ப மண்டல பிம்ப அக்னி சதுஸ்தான பூஜைகள், கடம் எழுந்தருளல் நடந்தது. பின் சௌந்தரராஜப் பெருமாள், நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து விமானங்கள், ராஜகோபுரம், மூலவர் லெஷ்மி நாராயணப் பெருமாள் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.