பதிவு செய்த நாள்
01
செப்
2022
06:09
சரவணம்பட்டி: கோவை சரவணம்பட்டி பகுதியில் 37 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சரவணம்பட்டியில், சென்டை மேளங்கள் முழங்க திருத்தேர் உலா நடந்தது. கோவை சரவணம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 37 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.
கணபதி மாநகரில் உள்ள வெற்றி விநாயகர் கோயிலில் 29ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. 5ம் ஆண்டு திருத்தேர் விழாவை முன்னிட்டு, அன்னதானம் நடந்தது. மாலையில் திருத்தேரோட்டம் நடந்தது. இரவு 9.00 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. சிவானந்தபுரத்தில் 27ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமம், விநாயகர் பிரதிஷ்டை, மாலையில் திருவிளக்கு பூஜைகள் நடந்தன. இன்று மாலை 5.00 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. சரவணம்பட்டி சிரவணபுரீசுவரர் கோயில் விநாயகர் சதுர்த்தி விழா திருத்தேர் பெருவிழா 80 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருத்தேர் உலா மாலை 4.00 மணி அளவில் சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் துவங்கியது. திருத்தேர் உலா விளாங்குறிச்சி ரோடு, சத்திரோடு, ஆஸ்பத்திரி வீதி வழியாக மீண்டும் கோயிலை இரவு 9.00 மணிக்கு வந்தடைந்தது.
கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சித்தி விநாயகர் கோயில் 60ம் ஆண்டு சதுர்த்தி விழா நேற்று நடந்தது. காலை 7.00 மணிக்கு பேரொளி வழிபாடு துவங்கியது. மாலையில் சிறப்பு அலங்காரம், சிறப்பு அலங்காரம் அன்னதானம் நடந்தது. இரவு 8.00 மணி அளவில் பரிசளிப்பு விழா, வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, விநாயகபுரம், துடியலுார் ரோடு, கரட்டுமேடு, விசுவாசபுரம், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் 37 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. விநாயகர் கோவில்களின் விசேஷ பூஜைகள் நடந்தன.