பதிவு செய்த நாள்
02
செப்
2022
07:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 150 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. தருமபுர ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேலாக்குறிச்சி ஆதீனம் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை காவிரி நதியின் கரையில் அமைந்த மிகவும் பழமையான நகரம். மயிலாடுதுறை சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. துலா கட்ட விஸ்வநாதர்,
திருவழந்தூர் விஸ்வநாதர், வள்ளலார் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பெரிய கோயில் விஸ்வநாதர், கூறைநாடு விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர்
ஆகிய ஏழு விஸ்வநாதர் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில் காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்து வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை ஒட்டி காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது. தொடர்ந்து 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஏழ்நிலை ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் கோபுர கலசங்கள் உள்ளிட்டவற்றிற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. கொட்டும் மழையில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், வேளாகுறிச்சி ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.