பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின் 126வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரு நாள் சங்கீத உற்சவம் பாலக்காட்டில் நாளை துவங்குகிறது. பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில் நாளை (செப்., 3) மாலை 5.30 மணிக்கு கேரளா கலாமண்டலம் பதிவாளர் டாக்டர் ராஜேஷ்குமார் துவக்கி வைக்கிறார். வழக்கறிஞர் நரேந்திர மேனன் தலைமை வகிக்கிறார். மிருதங்க வித்வான் குழல்மன்னம் ராமகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றுகிறார்.
தொடர்ந்து சுகுமாரி நரேந்திர மேனன் குழுவினரின் இசை கச்சேரி நடக்கிறது. செப்., 4 காலை 8.30 மணிக்கு செம்பை வித்யா பீடம் ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து சங்கீதா ஆராதனை நடத்துகின்றனர். 11க்கு செம்பை வித்யா பீடத்தின் 37வது மாநாட்டை கேரளா சட்டசபை ஸ்பீக்கர் ராஜேஷ் துவக்கி வைக்கிறார். எம்.எல்.ஏ., சுமோத் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில் "பிரவாசி பாரதிய சம்மான் விருதிற்கு தகுதி பெற்ற தொழிலதிபர் டாக்டர் சித்தீக் அஹமதை கௌரவிக்கின்றனர். தொடர்ந்து மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் இசை கச்சேரி நடக்கிறது. இந்த இருதின சங்கீத உற்சவத்தில் சுமார் 120 இளம் இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கின்றது குறிப்பிடத்தக்கது. செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை சுரேஷ், செயலர் முருகன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.