பதிவு செய்த நாள்
02
செப்
2022
07:09
நாகப்பட்டினம்: நாகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 32 அடி உயர விஸ்வ ரூப அத்தி விநாயகர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. மொத்தம், 32 அடி உயரத்தில் அத்தி மரத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை , அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு வீதியுலா நடந்தது. மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், சிலம்பம், கேரளா செண்டை மேளம், கதகளி, கரகாட்டம் உட்பட 30க்கும் மேற்பட்ட வாத்தியங்கள் முழங்க, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஏராளமான வாகனங்கள் வீதியுலாவில் அணிவகுத்தன. நாகையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த விநாயகர் ஊர்வலம், நேற்று காலை நாகூர் வெட்டாற்று பகுதியை வந்தடைந்தது. பின், பிரதிஷ்டைசெய்யப்பட்ட களிமண்ணால் ஆன விநாயகர் சிலை , பைபர் படகில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில்கரைக்கப்பட்டது. நாகையில் இருந்து நாகூர் வரை நடந்த விநாயகர் வீதியுலாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.