ஸ்கந்தன் என்ற வடசொல்லே தமிழில் கந்தன் என்று வழங்கப்படுகிறது. இச்சொல்லுக்கு துள்ளிக் கொண்டு வெளிப்பட்டவர் என்று பொருள். உலகத்தைக் காத்தருள வேண்டும் என்று துடிப்புடன் துள்ளி வந்ததால் இப்பெயர் உண்டானது. முருகனுக்கு, சுப்பிரமணியர், கார்த்திகேயர், சரவணர் என்று எத்தனையோ பெயர் இருந்தாலும், அவரது வரலாறு சமஸ்கிருதத்தில் ஸ்காந்தபுராணம் என்றும், தமிழில் கந்தபுராணம் என்றும் உள்ளது. அவருடைய இருப்பிடத்திற்கு ஸ்கந்தலோகம் என்று பெயர். அருணகிரிநாதர் முருகனின் அருளைப் பெற்ற பின் பாடிய நூல் கந்தர் அனுபூதி. முருகனுக்கு மூத்தவன் என்ற பொருளில் விநாயகருக்கும் ஸ்கந்தபூர்வஜர் என்றொரு பெயருண்டு. முருகனின் பாடல்களில் கந்தசஷ்டி கவசம் சிறப்பானது. கந்தா என்ற மந்திரம் சொல்லிவழிபட்டால், முருகன் துள்ளி வந்து அருள் செய்வார் என்பர்.