ஈசனிடம் வைக்கும் அன்பே பக்தி. அன்பு யாரைக் குறித்து வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து வேறுவேறு பெயர்கள் உண்டு. சம வயதினரிடம் வைக்கும் அன்புக்கு சிநேகிதம், நட்பு என்று பேர். பெரியவர்களிடம் வைக்கிற அன்பு மரியாதை. குழந்தையிடம் வைக்கும் அன்பு வாத்ஸல்யம். கதாநாயகன், நாயகி இருவரும் அன்பு கொள்வது சிருங்காரம். நம் மாதிரி சாதாரணப் பட்டவர்கள் நம்மைவிட கஷ்டப்படுகிறவர்களிடம் வைக்கிற அன்புக்குப் பரிவு என்று பெயர். அதுவே நம்மை விட மகாபெரியவர்கள் நம்மிடம் வைக்கும்போது அருள், கிருபை என்றெல்லாம் பேர் எடுக்கிறது. கஷ்டநிலையைப் போக்கடிக்கும் சக்தி மகான்களின் அருளுக்கு இருக்கிறது. அன்பின் உச்சி தான், ஈஸ்வரன் நம்மிடம் வைக்கும் பரிவான அன்பு. இந்த பரமகருணைக்கு அநுக்ரஹம் என்று பேர் சொல்கிறோம். அப்படிப்பட்ட ஈஸ்வரனிடம் நாம் வைக்கிற உசந்த அன்பு தான் பக்தி என்பது. -காஞ்சி பெரியவர்.