பதிவு செய்த நாள்
06
செப்
2012
10:09
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை 5.20 மணிக்கு, கோயில் 2ம் பிரகார செப்புக்கொடிமரத்தில், வேத பாராயணம், தேவாரம், திருப்புகழ் முழங்க, முத்துசுப்பிரமணிய பட்டர், திருவிழா துவக்க கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, மஞ்சள், விபூதி,இளநீர், பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் கொடிமரத்திற்கு நடந்தன. இதையடுத்து, பட்டு ஆடைகள், மலர்,மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10ம் திருவிழாவான, செப்.,14ம் தேதி காலை நடக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்திற்குப்பின், கொடிமரத்திற்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.