பதிவு செய்த நாள்
05
மார்
2026
07:03
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சிக்கு 45 நாட்கள் முன்பும், பின்பும் இக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்நிலையில், கும்ப ராசியில் உள்ள சனி பகவான், நாளை, 6ம் தேதி காலை, 8:24 மணிக்கு மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி பரிகாரத்திற்காக வரும் பக்தர்கள் வசதிக்காக, நாளை அதிகாலையில் இருந்து சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனைகள் நடைபெறும். இலவச தரிசனம் செல்லும் பக்தர்கள், நளன் குளம் வாயிலில் இருந்து வரிசையில் செல்ல வேண்டும். கட்டண தரிசனத்திற்கு, 15 இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகம் முழுதும், பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பயணியர் வசதிக்காக, 10 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், முதலுதவி மையங்கள், குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறைகள், தற்காலிக கழிப்பறைகள், நிரந்தர கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நளன் குளத்தை சுற்றிலும், பெண்கள் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கவும், குற்றச்சம்பவங்களை தடுத்திடும் பொருட்டு, தீவிர கண்காணிப்பு பணிக்காக, 200 இடங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர உதவிக்கு தகவல் மற்றும் அவசர உதவிக்கு, 83002 61071 என்ற மொபைல் எண் மற்றும் 1070, 1077 ஆகிய டோல்பிரி எண்களில் கட்டுப்பாட்டு அறையை, பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்