பதிவு செய்த நாள்
05
மார்
2026
05:03
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விரத பூஜையுடன், குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, சர்க்கார்பதியில் இருந்து 85 அடி உயர கம்பம் கொண்டு வரப்பட்டு, சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவில், ஆனைமலை மாகாளியம்மன் கோவில்களில் பூஜை செய்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கம்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடந்த 16ம் தேதி நடப்பட்டது. கடந்த, 22ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று குண்டம் கட்டுதல், அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், 60 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. நேற்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
விரதம் இருந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷமிட்டு குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இது தவிர, 5 அடி முதல் 10 அடி நீளம் கொண்ட அலகு குத்தியும், பக்தர்கள் குண்டம் இறங்கி பரவசமடைந்தனர். கோவில் அறங்காவலர் செந்தில்வேல் மற்றும் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, திருத்தேர் ஊர்வலம் நடந்தது. இன்று திருத்தேர் நிலை நிறுத்தம்; ஊஞ்சல் பட்டாபிேஷகம் நடக்கிறது. நாளை, 7ம் தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு நிகழ்ச்சி நடக்கிறது.