பதிவு செய்த நாள்
05
மார்
2026
07:03
நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்புக்கு நடந்த பேரணியில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி, கன்னியாகுமரி மாவட்டம், சுவாமி தோப்பில் உள்ளது. அவரது, 194ம் அவதார தினத்தை ஒட்டி நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சுவாமி தோப்புக்கு பேரணி புறப்பட்டது. இதற்காக அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்று, திருச்செந்துார் கடற்கரையில் இருந்தும், திருவனந்தபுரத்தில் இருந்தும் புறப்பட்ட வாகன பேரணிகள், நேற்று முன்தினம் இரவு, நாகராஜா திடல் வந்தடைந்தன. அங்கு நடந்த மாசி மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து பேரணி புறப்பட்டது. இதற்கு, பையன் ஸ்ரீராம் தலைமை வகித்தார். பையன் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். பூஜிதகுரு பால ஜனாதிபதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. காவி உடை அணிந்த பக்தர்கள், காவிக்கொடி ஏந்தி, ‘அய்யா சிவ சிவ அரகர அரகரா’ என்று கோஷமிட்டனர். மேலும் சிலர் சந்தனக் குடம் ஏந்தியும், கோலாட்டம் ஆடியும் பேரணியில் சென்றனர். கோட்டார் சந்திப்பில் வந்த பேரணிக்கு, சவேரியார் சர்ச் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றின் கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்களுக்கு குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன.சுவாமிதோப்பு, நேற்று பக்தர்களால் நிறைந்து காணப்பட்டது. முத்திரி கிணற்றில் குளித்து பக்தர்கள் குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.