பதிவு செய்த நாள்
03
மார்
2023
05:03
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழா தேரோட்டம், இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேர்த்திருவிழா, இன்று காலை 9:00 மணிக்கு, கோலாகலமாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து, தேரோட்டத்தை துவக்க உள்ளனர். கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக, தேரடிக்கு வருவதற்கு ஏற்ப, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆறாம் நாள் உற்சவமான நேற்று காலை, தொட்டி உற்சவம் மற்றும் இரவு யானை வாகனம் உற்சவ அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து, கந்த பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.