கருமத்தம்பட்டி: வினோபா நகர் ராஜ கணபதி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கிட்டாம்பாளையம் ஊராட்சி வினோபாஜி நகரில் உள்ள ராஜ கணபதி கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, நேற்று காலை கோ பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 10:30 மணிக்கு, விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் இருந்து, மேள தாளத்துடன் முளைப்பாலிகை எடுத்து வரப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள், சிறுமிகள் பங்கேற்று பாலிகை ஏந்தி வந்தனர். மாலை, புண்யாகவாசனம், வாஸ்து பூஜையுடன் முதல் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. கோபுர கலசம் நிறுவப்பட்டது. இன்று காலை இரண்டாம் கால ஹோமம் முடிந்து, 6:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.