பதிவு செய்த நாள்
09
மார்
2023
11:03
கடலுார் மாவட்டம், கிள்ளை முழுக்குத்துறையில் மாசி மக திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பூவராக சுவாமி தைக்கால் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளினார்.
நேற்று காலை பூவராக சுவாமி, கிள்ளை தைக்கால் தர்கா வழியாக தீர்த்தவாரிக்கு, முழுக்குத்துறை கடற்கரைக்கு சென்றார். அப்போது, காலை 10.15 மணிக்கு, தைக்கால் சையத் ஷா ரஹகமத்துல்லா தர்காவில், பாரம்பரிய முறைப்படி பூவராக சுவாமிக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. தர்கா டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில், முஸ்லிம்கள் ஹிந்து முறைப்படி, தாம்பூல தட்டில் பழம், அரிசி, 501 ரூபாய் பணம் வைத்து, பட்டு சாத்தி, சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதேபோல, கிள்ளை பேரூராட்சி சார்பில், சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன், செயல் அலுவலர் செல்வி, ஆகியோர் சுவாமிக்கு வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆச்சாரியார்கள் தர்காவில் எழுந்தருளினார்.
மாலை, நாட்டு சர்க்கரை, வத்தி உள்ளிட்டவற்றை, டிரஸ்டி சையத் சக்காப்பிடம் வழங்கி, உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தர்கா டிரஸ்டி சையத் சக்காப் கூறியதாவது: மாசிமக தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு முன்னோர் வழக்கப்படி ஏழு தலைமுறையாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பூவராக சுவாமிக்கு, பாரம்பரிய முறைப்படி பட்டாடை சாத்தி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதுபோல், அவர்கள் கொடுக்கும் நாட்டு சர்க்கரையை வைத்து, பாத்தியா ஓதி பிரசாதம் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.