காரமடை: பங்குனி மாதம் கிருஷ்ண பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூலவரான ரங்கநாதருக்கு அதிகாலையில் கோ பூஜை ,கோ தரிசனம் ,மூலவருக்கு திருமஞ்சனம் முடிந்து, கால சந்தி பூஜை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க தேவியரோடு எழுந்தருளுவிக்கப்பட்ட உற்சவர், கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். பின்னர் ஆஸ்தானத்தை அடைந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சாற்றுமுறை சேவித்து, கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபம் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.