பதிவு செய்த நாள்
10
மார்
2023
08:03
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவில் மாசிக்கொடை விழாவில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை நடக்கிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற
கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் , மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த வருடத்தின் மாசிக்கொடை விழா கடந்த 5ம் தேதி காலை திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. நேற்று வியாழக்கிழமை 5ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை , 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ., நிறுவனத்தில் இருந்து யானை மீது சந்தன குடம் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில் வந்தடைந்தது. 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை , 9 மணிக்கு அத்தாழ பூஜை , 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி ஆகியவை நடந்தது.
6ம் நாளான இன்று வெள்ளிக் கிழமை மாசிக்கொடையின் முக்கிய வழிபாடான
வலியபடுக்கை என்னும் மஹா பூஜை நடக்கிறது. வலியபடுக்கை பூஜை என்பது நள்ளிரவு வேளை அம்மனுக்கு மிகவும் பிடித்த உணவு, கனி வகைகள், இனிப்பு போன்ற பதார்த்தங்களை அம்மன் முன் பெரும் படையலாக படைத்து நடக்கும் சிறப்பு பூஜையாகும். இந்த வழிபாடு மாசிக்கொடையின் 6ம் நாளன்றும், மீன பரணிக்கொடை விழா அன்றும், கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்திற்கு 3 முறை மட்டும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து இந்த வலியபடுக்கை பூஜையில் கலந்து கொள்வர். இப்பூஜையில், படைக்கப்படும் பதார்த்தங்கள், கனிகள் நாளை காலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.