சீர்காழி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 10:04
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பழமை வாய்ந்த பிரத்தியங்கிரா தேவி கோயில் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வருஷபத்து கிராமத்தில் பழமை வாய்ந்த பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஐயப்பன் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு பால் குட திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பால்குட திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடத்தை தலையில் சுமந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட பால்குடங்கள் ஆலயத்தை வந்தடைந்ததை அடுத்து மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்பன் பிறந்த நட்சத்திரமான ஐயப்பனுக்கு நெய் அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு வீதி உலா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் எடமணல், சீர்காழி, வழுதலைக்குடி, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.