பதிவு செய்த நாள்
05
ஏப்
2023
10:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர நாளன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். அதன்படி கடந்த மார்ச் 28 அன்று கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. ஒன்பதாம் திருநாளான இன்று காலை 10:00 மணிக்கு கோயில் பட்டர்கள், கோட்டை தலைவாசல் ரேணுகாதேவி கோயிலில் இருந்து ஆண்டாளுக்கு திருக்கல்யாண பட்டுப் புடவை, ரெங்கமன்னாருக்கு வேஷ்டி மற்றும் திருமாங்கல்யத்தை பெற்று வந்தனர். பின்னர் கோயிலில் திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு ரெங்கமன்னார் வீதிபுறப்பாடும், வேதபிரான் பட்டர் தேங்காய் பெறுதலும், பூரண கும்பத்துடன் பெரியாழ்வார் எழுந்தருளலும் நடந்தது. பின்னர் மாலை 4:00 மணிக்கு அங்கமணிகளுடன் ஆண்டாள் வீதி சுற்றி வந்தார். பின்னர் மணவாள மாமுனிகள் சன்னதி வாசலில் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னார் மணமேடையில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, கன்னிகாதானம் நடந்து, ஆண்டாளுக்கு, திருமலை திருப்பதி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட, பட்டுச்சேலை சாற்றப்பட்டது.
பின்னர் பெரியாழ்வார் முன்னிலையில் இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண வைபவத்தை பாலாஜி பட்டர் தலைமையில் கோயில் பட்டர்கள் நடத்தினர். ஆடிப்பூர பந்தலில் குழுமியிருந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் சடகோபராமனுஜ ஜீயர், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.