காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம் விமரிசையாக நடந்தது.
ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின் தங்க ரிஷப வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் காலை, இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 31ம் தேதி காலை அறுபத்து மூவர் உற்சவம் விமரிசையாக நடந்தது. அன்று இரவு வெள்ளித்தேர் உற்சவம் நடந்தது. மறு நாள் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இவ்வாறு இந்த பிரம்மோற்சவத்தில் சுவாமி தினசரி காலை, இரவு வேலைகளில் நான்கு ராஜவீதிகளில் வலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த பிரம்மேற்சவத்தில் நேற்று அதிகாலை ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்பாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. இவ்விழா கோவில் வளாகத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த உற்சவத்தை காண கூட்டம் அதிகளவில் செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின்படி, செய்யப்பட்டது. சுவாமி திருக்கல்யாணம் முடிந்ததும் ஏகாம்பரநாதர் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதியுலாவில் ஏலவார்குழலி அம்பாள், வள்ளி, தெய்வானையுடன் முருகன், விநாயகர் வீதியுலா நடந்தது.