அன்னூர்: குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.
குமாரபாளையத்திலுள்ள பழமையான வட்டமலை ஆண்டவர் கோவிலில், 13ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் வரை தினமும் காலையில் யாகசாலை பூஜையும், மாலையில் உட்பிரகாரத்தில் சுவாமி உலாவும் நடந்தது. நேற்று காலை 9:15 மணிக்கு வட்டமலை ஆண்டவர் தேருக்கு எழுந்தருளினார். இதையடுத்து 10:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. குமாரபாளையம் ஜமாப் குழு இசை மற்றும் மோளகாளிபாளையம் பாலமுருகன் குழுவின் காவடி ஆட்டத்துடன் தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏராளமான பக்தர்கள் தேரின் முன்பு நீர் ஊற்றி வரவேற்றனர். பக்தர்களுக்கு மோர், கம்பங் கூழ் வழங்கி வட்டமலை ஆண்டவருக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர். ஜமாப் இசைக்கு ஏற்ப பக்தர்கள் பலர் நடனம் ஆடினர். 3000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3:10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அன்னூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரவு 7:00 மணிக்கு தெப்போற்சவமும், நாளை காலை 10:00 மணிக்கு மகா அபிஷேக பூஜையும் நடக்கிறது.