பதிவு செய்த நாள்
23
மே
2023
06:05
மயிலாடுதுறை: சீர்காழி சட்டை நாதர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சிறப்பு தரிசனம் செய்து ஐந்தாயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் 32 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணி வேலையில் செய்யப்பட்டு நாளை 24 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை ஏழாம் கால யாகசாலை பூஜையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். கோவிலுக்கு வந்த தமிழக ஆளுநருக்கு ஆதீனம் சார்பில் பூர்ணகும்ப மரியாதை யுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமை ஆதீனம் 27 வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை தமிழக ஆளுநர் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து 5 ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்ற ஒரே இடத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர் எம் ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து கலைநிகழ்ச்சியை கண்டு களித்தார். தொடர்ந்து யாகசாலையில் பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். அவருக்கு தருமை ஆதீனம் பிரசாதங்களை வழங்கினார். பின்னர் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
கடந்த மாதம் யாகசாலை பூஜைக்காக மண் எடுத்தபோது கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் தேவார பதிகம் பதிக்கப்பட்ட செப்பேடுகளை வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியத்தை பார்வையிட்டார். கலெக்டர் மகாபாரதி, பிஆர்ஓ முருகதாஸ், ஆர்டிஓ அர்ச்சனா, ஆதீன தம்பிரான் சுவாமிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருச்சி சரக ஐஜி. கார்த்திகேயன், தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முன்னதாக போலீஸ் சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்