பதிவு செய்த நாள்
24
மே
2023
10:05
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்ற இத்தலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து, "ஓம் என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி, உமா மகேஸ்வரராக வருகையில், ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தை பார்த்தார். இதுவே எல்லாவற்றிற்கும் மூல க்ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத் தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும், ஆணவங்களை அழிப்பவராக சட்டை நாதராகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இது குரு மூர்த்தம் எனப்படும். உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார்.
பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார். இங்கு வந்து வணங்கினால் தான் என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர். இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா! என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, ""பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே, எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, ""தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே என்று பாடினார். தந்தை அசந்து போனார். தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இத்தகைய சிறப்பு மிக்க சட்டை நாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக யாகசாலை பணிக்காக கடந்த மாதம் மேற்கு கோபுர வாயில் அருகே பள்ளம் தோண்டும் போது சுவாமி ஐம்பொன் சிலைகள், தேவாரம் பதிக்கப்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்கப்பெற்றன. தேவாரம் பதிக்கப்பட்ட செப்பேடுகள் முதல் முறையாக இக்கோயிலில் கிடைக்கப்பெற்றது, இத்தலத்துக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டன. 20ம் தேதி முதல் கோவிலின் மேல கோபுர வாசல் அருகே 88 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் எட்டு கால பூஜைகள் நடைபெற்றன. எட்டாம் கால யாகசாலை பூஜைகள்இன்று காலைமுடிந்து பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடன்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து சுவாமி அம்பாள் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட கோபுரங்களை வந்தடைந்ததுகாலை 9:00 மணி முதல் 10 மணிக்குள் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாயாஎன்று கோஷமிட்டு கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி அம்பாளை தரிசித்தனர்.