பதிவு செய்த நாள்
24
மே
2023
05:05
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழியில் சந்தைப்பேட்டை மைதானம் அருகே உள்ள மகா மாரியம்மன் கோவிலில் பல்வேறு புனர அமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு கருங்கல்லால் கருவறை, அர்த்தமண்டபம், மூன்று நிலை விமானம், ஏக மண்டபம் அமைத்து புதிய கன்னிமூல விநாயகர் கோயில், துவார சக்திகளும் அமைக்கப்பட்டுள்ளன. வலது பாகத்தில் துர்க்கை அம்மன் திருக்கோயில் மற்றும் கன்னிமார் நவ கோள்களுக்கு தனி கோயில், விமானத்தில் சூரிய கடவுள் குதிரை வாகனத்தில் காட்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஏக மண்டப தூண்களில் அன்னையின் அவதார திருமுறைகள் கலை நயமிக்க சிலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. மடப்பள்ளி அமைக்கப்பட்டு திருக்கோயில் முழுவதும் வர்ணங்கள் தீட்டப்பட்டு, திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
விழாவை ஒட்டி இம்மாதம், 21ம் தேதி திருவிளக்கு வழிபாடு, பேரொளி வழிபாடு, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல் நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு முளைப்பாலிகை ஊர்வலத்தை வரவேற்றல், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடந்தது. இரவு முதலாம் கால யாக வேள்வி நடந்தது. 22ம் தேதி திருமஞ்சனம், 108 வகையான காய்கனி பூஜை உள்ளிட்ட வேள்வி மலர் வழிபாடு, திருமுறை இசைத்தமிழ் நிகழ்ச்சி நடந்தது. 23ம் தேதி விமான கலசம் நிறுவுதல், கன்னிமூல விநாயகர், துர்க்கை அம்மன், திருச்சுற்று மூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல், மகா மாரியம்மனுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. இன்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. விழா, சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.